ஒரு நாய் அவன் மேல் பாய்ந்து, அவன் குரல்வளையைக் கடித்தது. பிறகு அவனது தொப்பையில் லிபோசச்ஷன் செய்யத் தொடங்கியது. அந்த சமயத்தில் தான், அவன் விழித்துக்கொண்டான்.
‘சீ! இப்படியும் ஒரு கனவா வரவேண்டும்? கனவில் நாயா வரவேண்டும்?’ நொந்துகொண்டான். அவனுக்கு சின்ன வயதிலிருந்தே நாய் என்றால் அலர்ஜி. நாயைக் கண்டால் கல்லைத் தேடுவான்.
““““““அடுத்த கவலை: ‘காலையில் காணும் கனவு வேறு பலிக்கும் என்று சொல்வார்களே? அப்படி ஒரு வேளை பலித்துவிட்டால்?’ நினைத்துப் பார்க்கவே அவனுக்குத் தாங்கவில்லை. அவனுடைய தூக்கம் இன்னும் முழுமையாகக் கலையவில்லை. சரி, அப்படியே தூங்க முயற்சி செய்யலாமென்றால், அதே கனவு மறுபடியும் தொடர்ந்து – ‘இந்த நாய்களின் அட்டகாசம் இடைவேளைக்குப் பின் தொடரும் சினிமா மாதிரி வந்து விடுமோ’ என்ற பயம் அவனது தூக்கத்தை முழுவதுமாக அழித்தது!
காலை வெயில் – திறந்த ஜன்னலில் நுழைந்து, அவன் முகத்தைச் சுட்டது.
‘என் கால் மட்டும் ஏன் நனைந்திருக்கிறது? ஒருவேளை, காலையில் பார்த்த கனவு பலித்து விட்டதோ?’. கண்ணைக் கசக்கிக்கொண்டு பார்த்தவனுக்கு, தூக்கிவாரிப்போட்டது. கால்மாட்டில் நிஜமாகவே ஒரு நாய் இருந்தது. ‘எச் எம் வி ரெகார்ட் நாய்’ போல கம்பீரமாக உட்கார்ந்து இருந்தது. அதன் முகத்தில், அவனைப் பார்த்து சிரிப்பது போல ஒரு பாவம்.
கிள்ளிப் பார்த்துக் கொண்டான். இது சத்தியமாக கனவு இல்லை. மறுபடியும் அவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. கதவு திறந்திருந்தது. திறந்த வீட்டில் தெரு நாய் நுழைந்திருக்கிறது. நுழைந்தது மட்டுமல்லாமல் உடனே மளமள வென்று காலைக் கடன் முழுமையாக -அசலுடன், வட்டியும் சேர்த்து கழித்து விட்டது.
இது என்ன? நாய்களுக்கான கட்டணமில்லாக் கழிவறையா?’
“சூ…” என்று நாயைத் துரத்தினான். பேஷன் ஷோவில் நடக்கும் கவர்ச்சிப் பாவை போல, மெல்ல மெல்ல ஆடி, அசைந்து வெளியே சென்றது.
‘இந்த தெரு நாய்களைச் சுட்டுக் கொல்லவேண்டும். அப்ப தான் நிம்மதியா மூச்சு விட முடியும்’ – நினைத்தான். அந்த நேரம் பார்த்து போன் பெரிதாக அலறியது. அதை எடுக்க எழுந்தவன், வழுக்கி தடாலென்று விழுந்தான்.
“அய்யோ அம்மா” என்று அலறினான். மெல்ல எழுந்து போனை எடுத்தான்.
“ஹலோ” -என்றான்.
“….”
“யாரு?”- என்றான்.
“…….”
தூக்கக் கலக்கத்தில் யாரென்பது சரியாக விளங்கவில்லை.
“யாரு? நாய் மகனா?” -என்றான்.
“யோவ்..என் பெயர் நாயகன்” –போனில் பேசிய அந்தக் குரல் சூடாயிற்று.
“சரி சரி ..ராங் நம்பர்” –என்றான்.
“ராங் நம்பரா இருந்தா என்னடா? எங்கம்மாவை திட்டுவியா? சாவு கிராக்கி… போனை வைடா நாயே!”-போன் குரல் எகிறியது. அத்துடன் இதுவரைக் கேட்டிராத கெட்டவார்த்தைகள் சரமாரியாக வந்தது. அட, தமிழில் இத்தனை வசவு வார்த்தைகளா?
இன்றைக்கு நாய்கள் தினமா என்ன – தொட்ட இடங்களெல்லாம் நாயா?
போனை வைத்தான்.
‘நரி முகத்தில் முழித்தால் நல்லதாமே!’
‘நாய் முகத்தில் விழித்தால் என்ன பலனோ?’ என்று ஒரு கணம் யோசித்தான்.
பல்லி மேலே விழுந்தால் பலன் என்பது போல நாய்க்கும் யாராவது பஞ்சாங்கம் எழுதியிருந்தால் அதைப் படிக்கவேண்டும் – என்று தோன்றியது.
‘இனி அடுத்து என்ன நடக்கப்போகிறதோ?’ என்று யோசித்தவன், ஒரு வழியாக வீட்டைச் சுத்தம் செய்து, குளித்து விட்டு சோபாவில் அமர்ந்தான்.
‘அடடா.. குளிக்கப்போகும் போது, கதவை மீண்டும் மூடாமல் போனோமே.. அந்த நாய் மறுபடி வந்து விட்டதோ என்று பயந்தான். நல்லவேளை அப்படி ஒன்றும் நடக்கவில்லை.
வாசலில் ஒரு சலசலப்பு கேட்டது. “குட் மார்னிங், என்ன இவ்வளவு சீக்கிரமே ரெடி ஆயிட்டீங்க” – பக்கத்துக்கு வீட்டு மாமா ஆஜரில்லாமல், திறந்த வாசலில் நுழைந்து, அருகில் வந்து அமர்ந்தார்.
“அது வந்து… வேறொன்றுமில்லை… திறந்த வீட்டிலே நாய்” என்று தன் கதையை ஆரம்பித்த உடன் நாக்கைக் கடித்துக் கொண்டான். மாமா, அவரைத்தான் சொன்னோமென்று நினைத்துக்கொண்டால்?’
அதில் தவறு ஒன்றும் இல்லை தான் -என்றாலும் அவர் பெரியவர்- அவரை அப்படிச் சொல்லக்கூடாது..
மாமா ஒரு பெஸ்ட். அதாவது.. அட்டை போல் ஒட்டிக்கொள்வார். காது பிரச்சனை காரணமாக, வெகு உரக்கப் பேசுவார். சொன்னதையே மறுபடியும் சொல்வார். ஒரு நிமிடப் பேச்சு பத்து நிமிடமாகும். ஜோக் அடிப்பதாக நினைத்துக் கொண்டு அவரே ராக்ஷச சிரிப்பு சிரிப்பார். அவருடைய சிரிப்புக் கொடுமைக்கு பயந்து, அவன் அவரிடம் ஜோக் அடிப்பதில்லை.
பொதுவாகவே ஒரு பிரச்னையோடு தான் வருவார். இன்றைக்கு என்ன விஷயமோ?
“நான் நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன்” – என்றார் மாமா.
‘அப்பாடா’ – அவன் பெருமூச்சு விட்டான்.
“சொல்லுங்க மாமா”
“நம் தெருக்கோடியில் ஒரு நாய் இருந்ததே?” என்று மாமா இழுத்தார்.
‘என்னது மறுபடியும் நாயா?’ – அவன் உஷாரானான்.
மாமா தொடர்ந்தார்: “இன்றைக்கு காலங்கார்த்தாலே, அது, மூணு குட்டி போட்டது. அதில் இரண்டு குட்டிகள் ரோட்டில் தவழ்ந்த போது, கார் ஒன்றில் அடி பட்டு…” மாமாவின் குரல் சற்றே தழுதழுத்தது.
தொடர்ந்தார்.
“இது ஒன்று தான் தப்பியது”
“ “ -அவன் ‘ஞே’ என்று விழித்தான்.
மாமா என்ன சொல்ல வரார்?
“தப்பித்த நாய்க்குட்டி இது ஒன்றுதான். அநாதை போல அலைந்து கொண்டிருந்தது. இதை நீ வளர்த்துக் காப்பாற்ற முடியுமா” என்றார்.
அவரது கையில் ஒரு சிறு கூடை.
அதைத் திறந்தார்.
அதில், ஒரு அழகிய நாய்க்குட்டி – அவனைப் பார்த்தது.
தன் பெரிய கரு விழிகளைச் சிமிட்டியது.
‘பார்வை ஒன்றே போதுமே’ என்னும் ஒரு பார்வை.
அதன் வாலாடியது.
“வாலைக் குழைத்து வரும் நாய் தான் – அது மனிதர்க்குத் தோழனடி பாப்பா’- என்ற பாரதியின் வரிகள் அவன் மனத்தில் ஓடியது.
மனத்தில் யாரிடம் எப்பொழுது எப்படி காதல் பிறக்கும் என்பது யாரே அறிவர்?
அந்தக் கரியவிழிப் பார்வையில், அந்த ஒரு நொடியில், அன்று நடந்த நாய்த் தொல்லைகள் அனைத்தும் அவன் மனதில் இருந்து மறைந்தது.
அது அவனை ஆசையுடன் பார்த்தது.
அவனும் அதை ஆசையோடு பார்த்தான்.
‘அவளும் நோக்கினாள்… அண்ணலும் நோக்கினான்‘ – மொமென்ட் அது.
‘உன்னை மாமா அநாதை என்று சொன்னாரே. நீ இனி அநாதை இல்லை. உனக்கு நான் இருக்கிறேன்”- என்று எண்ணினான்.
‘இன்றிலிருந்து நானும் அநாதை இல்லை’ -தீர்மானித்தான் .
அந்த நாய்க்குட்டியை ஆசையுடன் கையில் எடுத்து அணைத்துக்கொண்டான்.
அவன் கண்ணில் ஏன் அந்த ஒரு சிறு துளி வரவேண்டும்?
அன்பு வருவதற்குக் காரணம் ஏதாவது இருக்க வேண்டுமா என்ன?.
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?