எட்டு வயதான கீர்த்தியைப் பள்ளிக்கூட உடையிலேயே ஆசிரியை கீதா அழைத்து வந்தாள். கீர்த்தி வந்த விதத்தில், வாழ்த்தியதில் பண்பாடு தெரிந்தது. துடிதுடிப்பான பல்வரிசையைக் காட்டும் சிரிப்பு, பெரிய கண்கள், அடர்த்தியான சுருட்டை முடி.
மாணவியை அணைத்தவாறு வந்தாள் கீதா மிஸ். கீர்த்தி திடீரென பல வாரங்களுக்குப் பள்ளியை விட்டுப் போவதை விளக்கினாள். இரண்டாவது முறை இப்படி நிகழ்வதால் என்னை அணுகியதாகக் கூறி வெளியேறினாள்.
காரணம் கேட்டபோது கீர்த்தியின் கண்கள் தளும்பியது. சமாதானம் செய்த பிறகு சொன்னாள், அம்மா ரமா மாறுதலுக்காக ஊருக்குப் போய் வரலாம் என்று அவ்வப்போது சொல்வதுண்டு. இந்த முறை 2-3 மாதம் அங்கே இருக்கலாம், பள்ளியை விட்டு விடலாமா எனக் கேட்டாளாம். பொதுவாகச் சனிக்கிழமை என்றால் ஊருக்குப் போவதுண்டு. அப்போதெல்லாம் மட்டும் அம்மா சந்தோஷமாக இருப்பாள், அழவே மாட்டாள். இதைப் பார்த்திருந்ததால் ஒப்புக்கொண்டேன் என்றாள் கீர்த்தி. கீதா மிஸ் சொன்னபடி போன வருடமும் இதையே ரமா செய்தாள். அப்போது ஒரு மாதம் பாடம் விட்டுப் போனது கடினமாக இருந்தது, இப்போதும் அப்படியே நடக்கிறது, இருந்தாலும் அம்மாவிற்காகப் பரவாயில்லை என்றாள் கீர்த்தி.
என்னிடம் தன் அம்மாவைப் பற்றிப் பேசுவது சரியில்லை என்றாள். பெற்றோரைப் பற்றியோ அவர்களைக் குறை கூறுவதற்கு அல்ல, மாறாக அவ்வப்போது பள்ளியை விட்டுச் செல்வதைப் பற்றி அறிவதற்கு என்று விளக்கினேன்.
கீர்த்தி என்னுடன் பரிச்சயமாவதற்காக, முதல் ஸெஷனில் அவளைக் கதை சொல்ல, எழுத, படங்கள் வரையச் செய்தேன். உற்சாகமாகச் செய்தாள். அவளுடைய மனக் குழப்பங்கள் இதில் வெளியானது.
நான் இதை எடுத்துச் சொல்ல, தன்னுள் வேதனைப் புதைக்கப்பட்டதைப் பகிர்ந்தாள். இவ்வாறு சங்கடப் பட வேண்டாம் என்றேன். யோசித்த பிறகுச் சரி என்றாள். மேம்படுத்தும் வழிகளை ஸெஷன்களில் தேடலாம் என்றேன்.
வீட்டினருக்குத் தெரிவித்ததில் பாட்டியும் மாமாவும் வந்திருந்தார்கள். கீர்த்தி கூறுவதை ஆமோதித்து, எவ்வாறு ரமாவுக்குப் புரிய வைப்பதென்று புரியாமல் அவஸ்தைப் படுவதைப் பகிர்ந்தார்கள். கீர்த்தியின் மனவேதனைகளைப் போக்குவதற்கு சில ஸெஷன்களும் வீட்டினரின் ஒத்துழைப்பும், தேவை என்றேன்.
வந்தார்கள், கீர்த்தியின் தந்தை மோகனுடன். எட்டாவதோடு படிப்பை நிறுத்திவிட்டு, பழங்கள் வியாபாரம் செய்பவர். ரமா பத்தாவது முடித்ததும் அவளுக்குத் தாய்மாமனான மோகனோடு கல்யாணம் செய்து வைத்தார்கள். ரமாவிற்கு விருப்பமே இல்லை. கணவன் தன்னைவிடக் குறைவாகப் படித்திருந்ததும். பாட்டியே மாமியார் என்பதால் எதிர்ப்பு சொல்ல முடியவில்லை. ரமா மோகன் இடையே பிரச்சினைகள் இருந்தன. கீர்த்தியோ இந்த வயதிலேயே பக்குவமாக இருப்பது பெருமைக்குப் பதிலாகச் சங்கடம் ஏற்படுத்துவதைப் பகிர்ந்தார் மோகன்.
கீர்த்தி தன்னுடைய சந்தோஷங்களை, பிடித்தவற்றை வரிசைப்படுத்துவதை உற்சாகமாகச் செய்தாள். பெற்றோர் சந்தோஷமாக இருப்பது பிடித்திருக்கிறது ஆனால் எப்போதாவது தான் இவ்வாறு என்றாள்.
மோகனிடம் இதைப் பகிர்ந்தாள் கீர்த்தி. கேட்கவே வெட்கமாக இருப்பதாகக் கூறினார். மாற்றுவதற்குத் தயாராக இருப்பதைச் சொன்னார். இதைக் கேட்டிருந்த கீர்த்தி சந்தோஷமாக உட்கார்ந்த இடத்திலேயே குதித்தாள்.
ரமா வரவேண்டியதை விளக்கினேன். ஒப்புக்கொண்டார். வந்ததோ கீதா மிஸ். இரண்டு நாட்களாகக் கீர்த்தியை வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போதே ரமா அழைத்துச் சென்று விடுவதாகச் சொல்லி வருத்தப் பட்டாள்.
கீர்த்தி ஸெஷனில் இவ்வாறு வகுப்பிலிருந்து விடை பெறுவதும் பல நாட்கள் போகாமல் இருப்பதும் வெட்கமாக இருப்பதாகச் சொன்னாள். படிப்பில் குழப்பம் ஏற்படுகிறது, சினேகிதி நெருக்கம் குறைவதாலும் வருத்தத்தை அளிக்கிறது என்றாள். ஸெஷன்களில் இதை எடுத்துக்கொண்டு பலதரப்பட்ட முறையில் நிலையைக் கையாளுவதைப் பார்த்தோம்.
கீர்த்தியின் இந்த வளரும் பருவத்தில் பெற்றோர்களின் நடத்தையிலிருந்து கற்றுக் கொள்வது ஏராளம். ரமாவின் நடத்தையினால் கீர்த்தியின் சுயமரியாதையில் தடுமாற்றம் தெரிந்ததிருந்ததால் ரமாவின் பங்களிப்பு அவசியமானது.
நாளடைவில் வந்தாள் ரமா. குழந்தையைப் பள்ளி நேரத்தில் வெளியே அழைத்துச் செல்வதற்கான காரணத்தைத் தன் சார்ப்பிலிருந்து விவரித்தாள். திடீரென எங்கேயாவது போவதும் தனக்குப் பிடித்ததைச் செய்வதும் தன் இச்சைப்படி இருப்பதற்கான வழி என்றாள். இவ்வாறு செய்யாவிட்டால் வெறும் இல்லத்தரசியாக, கீர்த்தியின் வளர்ப்பில் நேரம் போகிறது, வாழ்வை இவ்வாறு கழிப்பது பிடிக்கவில்லை என்று கூறினாள். தாயாக மற்றும் மனைவியாக இருப்பது சலிக்கிறபோது ஊருக்குப் போய் விடுவதை வெளிப்படையாகப் பகிர்ந்தாள். பெற்றோர் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்று கீர்த்தி ஆசைப்படுவதாகக் கேள்விப் பட்டேன் என்றதை அன்னியன் போலச் சொல்லி மௌனம் காத்தாள்.
தன் மனக்குறை நிலையை விவரிக்கச் சொன்னதும் இல்லற வாழ்க்கை கடிவாளம் போல இருப்பதாகத் தோன்றுகிறது, இல்லத்தரசியானதே பிடிக்கவில்லை என்றாள். இதன் அடிப்படையில் ஸெஷன்கள் நகர்ந்தன.
சிறுவயதிலிருந்து வகுப்பு தோழனான பாலா என்றவனிடம் எந்த பிரச்சினையும் கலந்து பேசி, அவன் பரிந்துரைப்படியே செயல் படுத்துவாளாம். இப்போதும் செய்வதாகச் சர்வசாதாரணமாகக் கூறினாள். ரமாவைப் பொறுத்தவரை அவன் சொன்னால் சரியாக இருக்கும். பாலா, ஊரில் வசிப்பதால், அங்குப் போவது வழக்கமாயிற்று. சந்தேகம் என்றால் ஊருக்கு ஓடி விடுவதுண்டு. அவன் சொல்வதை அச்சு அசலாகக் கடைப்பிடிப்பாளாம்.
புகுந்த வீட்டார் உறவினர்கள் என்பதால் அவளுடைய பெற்றோரிடம் இங்கு நடப்பதைச் சொல்லத் தயங்கினார்கள். பெற்றோரின் தாராள மனதினால் ஊரில் எல்லோரும் அவர்களை மரியாதையுடன் நடத்துவார்கள், ஆகையால் எதுவும் சொல்லவில்லை. இதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டாள் ரமா.
ரமாவிற்குக் குறை, பாலா போல் மோகன் இல்லை என்று. பாலா படித்தவன், பெரிய சம்பாத்தியம். மோகன் செய்யும் பழ வியாபாரத்தைச் சொல்லவே வெட்கமாக இருப்பதாகச் சொன்னாள். குடும்பம், குடும்பத்தினரையும் பிடிக்காததால் சொல்வதை நிராகரித்து, மனதிற்குப் பிடித்ததைச் செய்தாள்.
ரமா பிரச்சனைக்கு மூல காரணம், மற்றவர்கள் சொல்வதைத் தானாக யோசித்து பரிசீலனை செய்யக் கற்றுக்கொள்ளாததே. இந்தத் திறன் “க்ரிடிக்கல் தின்க்கிங்” (critical thinking). பாலா சொன்னது போலவே இயங்கினால் யாரை எவ்வாறு பாதிக்கிறது, யாருக்கு லாபமாகிறது என்றதை நினைத்துப் பார்க்கவில்லை. ரமாவிற்கு இல்லற வாழ்வு அமைந்திருந்த விதம் பிடிக்கவில்லை. பழிவாங்கும் வழி, கீர்த்தியைப் பள்ளியிலிருந்து கூட்டிச் செல்வதெல்லாம்; மகளுக்குப் பாதிப்பைப் பொருட்படுத்தவில்லை!
ரமாவின் பெற்றோர், விவரம் அறிந்து ஓடிவந்தார்கள். இதுவரை நிலைமை அறியாததற்கு வருந்தினார்கள், சுதாரிக்க வழி தேட தங்களால் முடிந்ததைச் செய்ய முயல்கிறோம் என்றார்கள். ஸெஷன்களுக்காக இருப்பதாகத் தெரிவித்தனர்.
ரமா என்றுமே பாலாவின் சொற்படி மட்டுமே நடந்து கொள்வதாக ரமாவின் பெற்றோரும் சொன்னார்கள். படிப்பை நிறுத்தி விட்டு திரைத்துறையில் சேர அவளைப் பாலா ஊக்குவிக்க, பயந்து விட்டார்கள். ரமாவின் கல்யாண யோசனை இதனாலும் நேர்ந்தது எனக் கூறினார்கள். அவன் குடும்பம் நல்ல நிலைமையிலிருந்தாலும், பாலா பலரைச் சீண்டி வேடிக்கை பார்ப்பதாலும் நக்கல் பேச்சினாலும் ஊரில் எல்லோரும் அவனிடமிருந்து விலகி இருப்பதுண்டு, ரமாவைத் தவிர.
ரமாவுடன் ஸெஷன்களைத் தீவிரப் படுத்துவதுடன் அவள் பெற்றோர் ஊருக்குப் போய் பாலாவிடம் பேசி அவனை அனுப்பி வைத்தார்கள்.
அவன் சனிக்கிழமைகளில் வரச் சம்மதம் என்றதை ஏற்றுக் கொண்டு அவனுடன் ஸெஷன்களைத் தொடர்ந்தேன். எளிதாக ஒத்துழைப்புத் தந்து விஷயங்கள் புரிந்து செயல் பட்டான். ரமாவின் ஒத்துழைப்பு குறைந்தே இருந்தது. தன் பரிந்துரைகள் இத்தனை இன்னல்களைத் தருவதைப் புரிந்து வேதனை கொண்டான் பாலா. இதுவரை தன் செயலால் எவ்வாறு பாதிப்பு என அறியாததால் தொடர்ந்து செய்தேன் என்றான். அவன் செயல்பாட்டை மாற்றப் பல ஸெஷன்கள் ஆகின. ரமா அவனையே நம்பி இருந்ததால் அந்த மாற்றங்களுக்கு அவன் ஒப்புக்கொண்டான்.
இவையெல்லாம் நடந்துகொண்டு இருக்கையில் மோகன் கீர்த்தியுடன் அதிக நேரம் கழிக்க வேண்டும் என்று ஸெஷனில் முடிவு செய்தோம். வியாபார வேலைகளில் குடும்பத்தினரையும் சேர்த்துச் செயல்படுத்த முடிவானது.
கீர்த்தி ஸெஷனில் பள்ளிக்கு இடைவிடாமல் போவது சாத்தியமா எனக் கேட்டதற்கு, சாத்தியம் எனச் சொல்லி வீட்டினருடன் இதைப் பரிசீலனை செய்வதாகக் கூறினேன். மோகன், அவனுடைய பெற்றோருடன் இரு ஸெஷன்களுக்கு ஆராய்ந்ததில், பல பரிந்துரைகள் வந்தது.
விளைவு, கீர்த்தியைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வதை மோகன் மேற்கொண்டான். நடந்து போய் வருவது என்று தீர்மானித்தோம். அந்த அரை கிலோமீட்டர் நடையில் இருவரும் பேசுவது, புதிர்கள் என விதவிதமானவை செய்யப் பாசம் அதிகரித்தது. பள்ளிக்குத் தடங்கல்கள் ஏற்படாமல் போவது கீர்த்தியை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இவ்வளவு மாற்றம் ஏற்படுகையில், ரமாவின் ஒத்துழைப்பு மிகக் குறைவாகவே இருந்தது. பாலாகூட மாறிவிட்டான். ரமாவோ, மோகன், குடும்பத்தினரின் குறைபாடுகளை விவரிக்கவே தயாராக இருந்தாள். விட்டு விட்டு ஸெஷன்களுக்கு வந்தாள்.
ஒரு பொழுதும் “நீ மாற வேண்டும்” என்று மற்றவர் சொல்வது பயன் அளிக்காது. அவர்களாகவே உள்ளிருந்து உணர்ந்து “ஆம் ஏதோ சரியில்லை, என்ன செய்யலாம்?” என நினைத்து வந்தால் மட்டுமே மாற்றம் வரும், ஒத்துழைப்பும் இருக்கும்! பாலா இதற்கு உதாரணம். ரமாவும் என்றைக்காவது அவ்வாறு அறிந்து வருவாள். அன்று வரை…
அண்மைக்காலமாக ரமாக்கள் மாதிரியான பெண்கள அதிகம் பேரைப் பார்க்கமுடிகிறது. தனது நடவடிக்கையால் தன் குழந்தைகளுக்கு ஏற்படும் மன உளைச்சல் மற்றும் சுயமரியாதை இழப்பு ஆகியவற்றை இந்தப் பெண்கள் கருதுவதேயில்லை. சொந்தத்தில் மணந்து கொண்டவன்பாடு இருதலைக்கொள்ளி எறும்பின் நிலைதான். அன்றாடம் செய்திகளில் பார்க்கும் இல்லறம் சார்ந்த கொலைகளுக்கும் தற்கொலைகளுக்கும் ரமாக்களின் வீட்டினர் கொடுக்கும் சுதந்திரமே காரணமாக இருப்பது கவலையளிக்கிறது.
உங்கள் கவுன்சலிங்க் வெற்றியடைய வாழ்த்துகள் !
LikeLike